இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,682 பேரும், கல்குடா தொகுதியில் 115,974 பேரும், பட்டிருப்புத்தொகுதியில் 94,645 பேருமாக 398,301 வாக்காளர்கள் இந்த ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், இந்த தேர்தலுக்காக 4,991 அரச உத்தியோகத்தர்களும், தேர்தல் கடமையில் பாதுகாப்பு கடமைகளுக்காக 1,688 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்ளனர். 12 ஆண் பெண் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 428 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச ஊடகப்பிரிவுதகவல் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மொத்த வாக்காளர்களும் நீதியானதும், நேர்மையானதும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும், வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், கணக்கெடுப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலிஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.
இன்று 15ம் திகதி வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர்.
தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச, உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆறு முறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















