மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் போசாக்கு உணவுப்பொதிகளும் இலவமாக வழங்கும் நிகழ்வு 24.11.2019 அன்று 10.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களும், உளவள சமூகமும், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களும் களவிஜயத்தினை மேற்கொண்டு கல்வியில் பின்தங்கியுள்ள போசாக்கு குறைந்த மாணவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் போசாக்கு உணவுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் சுமார் 62 மாணவர்களை இனங்காணப்பட்டு தலா ஜந்தாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிதியுதவி வழங்கிய நிறுவனமாக UNICEF, அமுலாக்கம் நிறுவனமாக CDF என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கல்வியின் முன்னேற்றங்களும், கல்வியின் மூலம் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்களை பற்றியும், பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை பற்றியும் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெளிவாக கருத்துரைத்தார்.
மேலும் தெரிவிக்கையில் பெற்றோர்கள் உழைப்பதில் மூன்றில் ஒரு பங்கினை பிள்ளைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றும், பிள்ளைகளே நம் நாட்டின் எதிர்காலம் பெற்றோர் ஆகிய நீங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை வளர்க்க பெரிதும் உதவவேண்டும் என குறிப்பிட்டார்.
உள ஆரோக்கியத்தின் மூலம் கல்வியினை எவ்வாறு முன்னேற்றலாம், மாணவர்கள் அறிவினை வளர்ப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் விரிவாக உள நல வைத்திய நிபுணர் டாக்டர்.T.கடம்பநாதன் அதிதியாக கலந்து கொண்டு கருத்துரைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் திரு.அ.பிரபாகர், CDF நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட உளநல உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





