மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதேபோன்று கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமைத்த உணவுகள், குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்றவற்றை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினூடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் திரு.எ.எம்.எஸ் சியாத் குறிப்பிட்டுள்ளார்.
கிரான், ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளதாகவும் சில தாழ்நில பிரதேசங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் ஒடுவதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இது குறித்த கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் மக்களின் பாவனைக்கு ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினைக் குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாக அரசாங்க அதிபர் திரு.உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.
02.11.2019 மட்டக்களப்பு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவிழ்ச்சியாக 16.1 மில்லிமீற்றர் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 2ம் திகதி முதல் அடுத்த 24 மணித்தியாளத்தில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.க.சூரியகுமார் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.








