மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழையினால் தாழ்ந்த பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறித்த தாழ்ந்த பிரதேசத்திலுள்ள நீரை அகற்றும் பணிகளை உள்ளூராட்சி சபைகளுடாக செயற்படுத்துமாறு விடுத்த பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாநகர சபைக்குள்ளடங்கும் நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட புதிய காத்தான்குடி, ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பரிவிலுள்ள ஐயங்கேணி, மீராக்கேணி, சதாம் ஹிசைன் கிராமம், செங்கலடி பிரதேச செயலகப்பரிவிலுள்ள வந்தாறுமூலை, செங்கலடி, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் உட்பட சகல பிரதேச செயலகப்பரிவிலுள்ள தாழ்ந்த பிரதேசங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்றுமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார். இதற்கமைய அவ்வப்பகுதி உள்ளூராட்சி சபைகளூடாக வெள்ள நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.
இதேவேளை அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் 03.012.2019 காலை வெள்ள நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்களுக்கு நேரில் சென்று வெள்ள நீர் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு அவ்வப்பகுதி மக்களின் ஆலோசனையைக் கேட்டறிந்து மேலதிகமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த விஜயத்தின் போது அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர் திரு.ஏ.சீ.எம்.சியாட், மட்டக்களப்பு மாநகர உதவி மேயர் திரு.கே.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் திரு.கே.சித்திரவேல், மாநகர பொறியியலாளர் திருமதி.சித்ராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதேவேளை மாவட்டத்தில் இதுவரை 1651 குடும்பங்களை சேர்ந்த 5774 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாவும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவும், உறவினர் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு உலருணவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.






