மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழை காரணமாக நாளுக்கு நாள் மக்கள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.எஸ். வியாழேந்திரனுடன் அரசாங்க அதிபர் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
பாதிக்கபட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவு வசதிகளையும் மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய உதவிகளையும் பெற்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாவற்குடா கிழக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு சமைத்த உணவு மற்றும் ஏனைய வளங்களும் ஏழு நாட்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதே போன்று ஆரயம்பதி கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட அல்மனார் பாடசாலையிலும் தங்க வைக்கபட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளும் வழங்குவதற்கான தீர்மானம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்து வருகின்ற காரணத்தால் மேலும் மக்கள் இடம் பெயரும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் இவர்களை பாதுகாப்பான முகாம்களுக்கு கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.






