அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள், குளங்கள், வீதியோரங்கள் மற்றும் மணல்பாங்கான பிரதேசங்களில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை 09.12.2019 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுனதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை 09.12.2019 இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட பதில் மாவட்ட பொலீஸ் அதிகாரி திரு.எஸ்.குமார ஸ்ரீ மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைப்பு அதிகாரி தென்னக்கோன் ஆகியோருக்கு இச்சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களை சட்டத்தின் முன்னிருத்துமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
இவ் மண் அகழ்வானது இரவு பகலாக மேற்கொண்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு செயல் புரிகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கவேண்டி வரும் எனவும் மக்களின் போக்குவரத்திற்கான பாதைகள் இந்நடவடிக்கையினால் சேதம் ஆக்கபட்டு வருவதும் அவதானிக்கப்பட்டது. குறிப்பாக பட்டிப்பளை பிரதேச காவல் துறையினர் இதில் பாரா முகமாக செயற்படுவதும் அங்கு அவதானிக்க முடிந்தது






