மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணபொருட்களை கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் தொடர்ந்து உரையாற்றுகையில் தனிநபர்கள் வெளிநாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தும் ஏனைய பொதுமக்களிடம் இருந்தும் நிவாரணபொருட்களை வழங்குமாறு கோருவது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகவே அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள், பணம் ஏனையவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்ததாக இதுவரை எங்கும் பதிவாகவில்லை.
மாவட்ட செயலகத்தினூடாக தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு துரிதமாக செயற்பட்டு பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிக்கின்ற வேலைத்திட்டம் கிரமமான முறையில் ஒழுங்கமைப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையிலே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரு வாரங்களாக சமைத்த உணவுகளையும் நண்பர்கள் உறவினர் வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இச் செயற்பாட்டை குழப்புகின்ற அடிப்படையிலே இவ்வாறான சமூக வலைதளங்கள், ஊடகங்களூடாக பொதுமக்களிடம் நிதி கோருவது தொடர்பில் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.






