மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு ஏ.சி.எம்.சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலை உத்தியோகத்தர்கள் சகிதம் வெள்ள அனர்த்த நிலைகளை கண்காணிப்பதற்காக கரவெட்டியாறு, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை பார்வையிட்டனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியவர்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களையும் பார்வையிட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். உன்னிச்சை குளத்தின் நிலைமையினை பார்வையிட்ட போது தற்போது நீரின் மட்டம் குறைவடைந்துள்ள நிலைமையிலும் மூன்று வான் கதவுகள் மூன்று அடி வரை திறந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது. அதே வேளையில் அதிகளவான மீன்களை மீனவர்கள் பிடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் தடவையாக ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோக பூர்வமான அறிக்கையின் படி 6287 குடும்பத்ததை சேர்ந்த 21104 பேர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றிலிருந்து மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வருவதையும் அவர்களுடைய அன்றாட கடமைகளில் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்கமுடிந்தது.





