
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில் தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு 30.12.2019 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை கைத்தொழில் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் அதி சிறந்த விருது வழங்கும் தேசிய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவான எட்டு கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் திரு பந்துல, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ.நவேஸ்வரன் உட்பட கைத்தொழில் முயற்சியாளர்கள், புத்தாக்கவியலாளர்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், தேசிய ரீதியிலான விருதினை பெற்றவர்கள் அரசஅதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய மட்டத்தில் 14 விருதுகள் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன. நடைபெற்ற இவ்விருதுவிழாவில் எட்டு துறைகளில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய விருதுகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. தேசிய மற்றும் மாகாண மட்ட விருதுகளும், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் துறை, காகிதாதி கழிவுகள், அலுமினிய கழிவுகள், இரசாயன கழிவுகள் கைத்தொழில், பைபர் கைத்தொழில், நெசவு கைத்தொழில் ,மரக்கைத்தொழில் ஆகிய எட்டு துறைகளுக்கே இந்தவிருதுகள் கிடைத்தன.இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு உதயகுமார் அவர்கள் கருத்துரை வழங்குகையில் அரச தொழில் வாய்ப்பை கூடுதலாக எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் தொழில் இல்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் கூடுதலான தொழில்வாய்ப்பை வழங்கியும் அதிக விருதுகளை பெற்றுக்கொடுத்து மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இம்மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களை பாராட்டுகின்றேன் என கூறினார்.
சிமடெக்ஸ் மற்றும் இனோடெக்ஸ் விருதுகளும் எமது மாவட்டத்திற்கு கிடைத்தமை பெருமைக்குரியதாகும். வேலையில்லாத வீதம் தேசிய மட்டத்தில் 4.1 வீதமாகவும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 6.8 வீதமாகவும் காணப்படுகின்றது. இதனை கைத்தொழில் அபிவிருத்தி மூலமாக தேசியமட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.












