விவசாய அமைச்சின் தேசிய உரச்செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவின் முறுத்தானை விவசாய மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கினை கிரான் முறுத்தானை முருகன் கோவில் வித்தியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் 07.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மானிய உரத்தின் சட்டமூலம், வினைத்திறன் மிக்க உரப்பாவனை, சேதனப்பசளைப்பாவனையின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகள் அதிகூடிய விளைச்சலை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விடயங்களை விவசாய திணைக்கள போதனாசிரியர் திரு. கே.நிசாந்தன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அரசாங்க அதிபரிடம் முறுத்தானை மக்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைத்து அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதன் போது பாடசாலைக் கல்வி தொடர்பான பிரச்சினைகளும் சட்டவிரோத மண் அகழ்வில் வீதிகள் சேதமடைந்து மக்களின் பாவனைக்கு இடைஞ்சல் ஆக இருப்பது பற்றியும் நிரந்தர வீட்டு வசதி இல்லாமை, மலசல கூட பிரச்சினைகள், காட்டு யானைகளின் தொல்லை, சமயத் தலங்களை அபிவிருத்தி செய்தல், சமுர்த்திக் கொடுப்பனவு, விவசாய செய்கைக்கு பயன்படுத்தும் நீர்ப்பாசனம் வழங்கும் சிதைந்து போயுள்ள சிறிய குளங்களை புனரமைப்புச் செய்தல் உட்பட வாழ்வாதார உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு அற்ற பிரச்சினைகள் மக்களால் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பணித்தார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு. ஆ.நவேஸ்வரன்,தேசிய உரச்செயலகத்தின் உதவிப்பணிப்பாளர் திரு. கே.எல்.எம்.சிராஜிதீன், கிரான் பிரதேச செயலாளர் திரு. எஸ்.ராஜ்பாபு, சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. அமுதா பாக்கியராஜா, அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு. எ.எஸ்.எம். சியாத், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் திரு. எஸ்.தயாபரன்,கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















