மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா இம்முறையும் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் கடந்த 17.01.2020ம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இத்தைப்பொங்கல் விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேச செயலகபிரிவுகளையும் சேர்ந்த பிரதேசசெயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், சமூர்த்தி சங்கங்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலயமானது பழமை மிக்க ஆலயமாதலால் இவ்வாலய முன்றலிலே இப்பொங்கல் விழாவினை நடாத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா மாட்டு வண்டிகளின் பண்பாட்டு பவணியுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், நெல் அறுவடை நிகழ்வும் ஏனைய அனைத்து நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக நடைபெற ஏற்ற சகல ஒழுங்குகளையும் மாவட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து அரிசி குற்றும் நிகழ்வு, கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் அத்தோடு பாரம்பரியமான வாழ்கை முறையினை பிரதிபலிக்கின்ற வீடுகளும் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டன. மேலும் இப்பொங்கல் விழாவிலே 17 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.


















