அபிவிருத்தி என்பது வெறுமனே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மட்டும் பூரண அபிவிருத்தியாக கருத முடியாது. எமது சமூகத்திற்குத் தேவைப்படுவது தனியார் துறையினரின் வளர்ச்சியும் இணைந்திருக்க வேண்டும். இதன் மூலமே பூரணமான அபிவிருத்தியை அடைய முடியும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு தாண்டவம்வெளி திவா ஹோம் கட்டட நிர்மாண கலை நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் தொடர்ந்து உரையாற்றுகையில் சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தனியார் துறையினரின் அபிவிருத்தி மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் பல்வேறு சவால்களைத் தாண்டி கட்டட நிர்மாணத் துறையில் சாதனை படைத்துள்ள இந் நிறுவனத்தின் முயற்சிகளை மனதார பாராட்டுவதுடன் எதிர் காலத்தில் இது போன்ற பல்வேறு துறைகளிலும் தனியார் துறையினர் திறமைகளை காண்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கு எமது மாவட்ட வர்த்தகர்களும் தொழில் முயற்சியாளர்களும் அக்கறைகாட்ட வேண்டும்.
இந் நிறுவன தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு.எம்.திவாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வீதி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் திருமதி கே.வண்ணியசிங்கம், மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.பி.கே.கெட்டியாராய்ச்சி உட்பட பல பிரமுகர்கள் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.









