
எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நான்காவது நாளாக மாவட்டச் செயலகத்தில் நியமனப் பத்திரங்களைக் கையேற்கும் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் எதிர்வரும் 19ஆந் திகதி வியாழக்கிழமை நன்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு ஆர். சசீலன் தெரிவித்தார்.
இந்த வேட்புமனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. அன்றைய தினத்தில் கட்சிச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியும், சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், இராஜநாதன் பிரபாகரன் தலைமையிலான ஈழவர் ஜனநாயக முன்னணியும், தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உட்பட ரம்ழான் முகம்மது இம்ரான் தலைமையிலான சுயேட்சைக்குழுவும், முகம்மது இப்றாகிம் முகம்மது நியாஸ் தலைமையிலான சுயேற்சைக்குழும் 18.03.2020 நண்பகல் வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தன. நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.
இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்களாக போட்டியிட விரும்புவோர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் இறுதித் தினமான எதிர்வரும் 19ஆந் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்தலாம் என்றும், இக்காலத்துல் அதாவது அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்குள் நியமனப் பத்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டணமின்றியும் ஒப்படைத்திருக்க வேண்டுமென்றும் தேர்தல் சட்டம் தெரிவிக்கின்றது. இதுவரை 3 சுயேற்சைக் குழுக்களும், 7 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.







