
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாக சென்றடையவில்லை. எனவே அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனை மக்களிடையே கொண்டு செல்ல கூடிய கவனம் செலுத்த வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பில் இயங்கிவருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக கொரோனா தொற்றினால் தொழில் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 30.03.2020 அன்று அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த வேண்டுகோளை அரசாங்க அதிபர் விடுத்தார்.
இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தில் மிகவும் கஸ்டப்படுகின்ற வாழ்வாதாரத்தை இழந்துள்ள தினக்கூலி செய்பவர்கள் போன்றோருக்கு தங்களது அமைப்புகளினூடாக ஏதாவது உதவிகளை செய்ய முடியுமாக இருந்தால் அவற்றை ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் மாவட்ட செயலகத்தினூடாக அல்லது பிரதேச செயலகங்களினூடாக செயற்படுத்துமாறும் அவ்வாறு செய்யப்படும் உதவிகள் பொருட்களாகவிருப்பின் எப்பகுதிகளுக்கு எவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரம் வழங்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக நிறுவனங்களுக்கப்பால் அமைப்புகள் அல்லாத தனி நபர்களிடமோ அல்லது குழுக்களிடமிருந்தோ உதவிகளைப் பெற்று வழங்கமுடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் இதுவரை மாவட்ட செயலகத்தினால் வாழ்வாதரங்களை இழந்துள்ள சுமார் 15 ஆயிரம் குடுப்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.





