
பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு பென்சன் திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும்வரை ஏப்ரல் ,மே மாதம் வரைக்குமாக தலா 25000 ரூபாய் வீதம் 50000 ரூபா முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் சகல அரச திணைக்களத்தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுநிருவாக அமைச்சு விடுத்துள்ள 8/2020 சுற்றறிக்கையில் சகல அரச திணைக்களத்தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விதம் அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போர் தாம் கடைசியாக பணிபுரிந்த திணைக்களத்தின் தலைவரிடம் இதனை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும் இந்த முற்பண ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதில் ஏதாவது தடையிருந்தால் மாவட்ட செயலகத்தின் செயலணி இலக்கமான 065-2222235 உடன் தொடர்பு கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு அறிவிக்கின்றார்.
இதேபோல் இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்குரிய முற்பண ஓய்வூதியத்தை உடனடியாக அவர்களின் வீடுகளுக்குச்சென்று பொதுநிருவாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் இம்மாவட்ட சகல அரச திணைக்களங்களின் தலைவர்களையும் வேண்டுகோள் விடுகின்றார்.





