
அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் 13.04.2020 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டிணியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார். அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியினைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துதரப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 231வது படைப்பரிவின் கட்டளை அதிகாரி கேனல் ஜனக பல்லேகும்புர, நுகர்வோர் அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியும், கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளருமான ஆர்.எப். அன்வர் சதாத் மற்றும் மாவட்டத்தின் அனேக அரிசி ஆலை உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






