
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் முன்னெடுக்கும் சௌபாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாய உற்பத்திகளுக்கு தற்பொழுது முன்னுரிமை வழங்கப்பட்டு விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்போது மரக்கறி மற்றும் பழமர செய்கைக்கு கூடிய கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விசேட திட்டத்தில் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கைக்கு ஆர்வம் காட்டும் குடும்பங்களுக்கு மரக்கறி விதைப்பக்கற்றுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டசெயலகத்தின் அரச ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய 16.04.2020 அன்று மாவட்ட செயலக வளவில் மஹாவலி, விவசாய, நீர்ப்பாசன, கிராமிய அபிவிருத்தி அமைச்சு விவசாய திணைக்களத்தின் அனுசரனையில் மரக்கறி விதைப் பொதிகள் 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வழங்குவதற்காக விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்டம் செய்வதில் ஆர்வமுள்ள 20 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு இவ்விதைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எம். அலி அக்பர், ஜே.எப். மனோகிதராஜ் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







