
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழி செய்யும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இம்மாவட்டத்தில் மண்முனைப் பற்று, காத்தான்குடி, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் 100 குடும்பங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பில் இயங்கிவரும் வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா அமைப்பு இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிதியுதவியுடன் வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு உலர் உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மண்முனைப்பற்றில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு வழங்கிவைக்கும் பணி 22.04.2020 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என் சத்தியானந்தி அவர்கள் தலைமையில் ஆரையம்பதி கிழக்கு செல்வா நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையிலான குழுவினர் ஆரையம்பதி பிரதேச மக்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தனர்.







