
கொரோனா நோய் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கான நிவாரன பணிகளை வழங்குவதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு ஊழியர்கள் சேவையாற்றினார்கள்.
இவர்களில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் சேவையினை பாராட்டி ஊக்குவிக்கும் முகமாக அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமானது இவர்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கியுள்ளது.
உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான திரு ப.முரளிதரன் அவர்கள் 01.05.2020 வைபவ ரீதியாக கையளித்தார். மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் சுமார் 1200 ஊழியர்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி சிறிகாந்த், பிரதேச செயலாளர்கள், அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ. சிவயோகராஜன், திட்ட உத்தியோகத்தர் திரு செல்வகுமார் மற்றும் கள உத்தியோகத்தர் திருமதி கிருஷ்ணவேணி ஆகியோரும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமானது நாட்டின் பல மாவட்டங்களில் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





