
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் செயற்பட்டு வருகின்ற விவசாயிகளுக்கான அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 14.05.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 5 ஆவது தடவையாக நிதி உதவிகளை வழங்குவதற்காக இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 5 மாகாண விவசாயிகளிடமிருந்து திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தொழில் முயற்சியாளர்கள், புதிதாக செயற்படவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தினூடாக உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் துறைசார் நிபுனர்களால் ஆலோசனையுடன்கூடிய அறிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்குமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு க.சிவநாதன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் தனன்ஜயன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா
புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு வை.பி. இக்பால், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா உட்பட பல அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தொழில் முயற்சியாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.







