
சனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாக கொரோனா நோய்த்தாக்கம் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான மற்றும் நோயாளர் கொடுப்பனவு, வயோதிபர்களுக்கான கொடுப்பனவு, மற்றும் சமுர்த்தி உதவிபெறுவோர், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் போன்றேருக்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவு மட்டக்களப்பு மாவட்டத்தில் 18.05.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தினால் சமுர்த்தி உதவிபெற்றுவந்த 101346 பேருக்கும் தொழில் பாதிக்கப்பட்ட 23354 பேருக்கும் மேன்முறையீட்டாளர்கள் 10615 பேருக்கும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 34474 பேருக்கும் மொத்தம் 160789 குடும்பங்களுக்கு 803.945 மில்லியன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவித்தி திணைக்கள தலைமை முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களுக்கும் மொத்தமாக ஒரு இலச்சத்தி அறுபதாயிரத்தி எழுநூற்றி எண்பத்தி ஒன்பது (160,789) குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது சமுர்த்தி வங்கிக் கணக்கு இல்லாத மேன்முறையீடு மூலமாகவும் வந்தவர்கள் காத்திருப்பு பட்டியல் மூலமாக வந்தவர்களில் சமுர்த்தி வங்கி கணக்கு இல்லாதவர்கள், “அங்கத்தவர் அல்லாத கணக்கு” ஒன்றினை நூறு ரூபாயினை (ரூ100) செலுத்தி ஆரப்பித்துக்கொள்வது கட்டாயமாகும்.
அடுத்த கட்டங்களில் நிவாரன உதவிகளை வழங்கும் போது சமுர்த்தி வங்கியூடாகவே வழங்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நிவாரண உதவிகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக அமையும் என்பதற்காகவே இந் நடைமுறையினை சமுர்த்தி திணைக்களம் முன்னெடுப்பதற்கான சுற்று நிருபத்தினை மாவட்ட செயலங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி அமுர்தகலாதேவி பாக்கியராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.







