
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலையைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதி அரச தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த அரச தொண்டார்வு நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நடவடிக்கைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் முயற்சியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஒருங்கிணைப்புடன் அரச தொலைக்காட்சிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவசக் கல்விப் போதனைகளை தடங்கலின்றி தொடர்ச்சியாக அமுல்ப்படுத்துவதற்கு அரசாங்க அதிபரின் வேண்டுகோளில் மட்டக்களப்பில் செயல்பட்டுவரும் தொண்டார்வு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதற்கமைய இந்நிகழ்ச்சித் தயாரிப்புக்குரிய செலவினத்தின் ஒரு பகுதியை பொறுப்பேற்க ஹொலன்ட் நாட்டின் ஹொலன்ட் வோர் சைல்ட் நிறுவனத்தின் நிதி உதவியில் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனமான எஸ்கோ நிறுவனம் முன்வந்துள்ளது.
இவ்வொளிபரப்பிற்கான நிகழ்ச்சித் தயாரிப்புக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையினை எஸ்கோ நிறுவனத்தின் மாவட்டப்பணிப்பாளர் எஸ். பிரஸ்தியோன் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் 29.05.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கிலங்கை தொழிநுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை போல் சற்குணநாயகம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, எஸ்கோ நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் செல்வி கோதை பொன்னுத்துரை, எஸ்கோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ். உதயேந்திரன், சமுத்திரவியல் பல்கலைகக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரீ.சுபராஜன், போதனாசிரியர் கே.அருட்சிவம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பயனுள்ள இந்த கல்விப்பணியினை மேலும் முன்னெடுத்துச் செல்ல மேலதிக நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தொண்டார்வ நிறுவனங்கள் முன்வரவேண்டுமென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கோரிக்கை விடுத்தார்.






