
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று ஆராயப்பட்டு வருகின்றுது.
கனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்தியா ஊடாக கொழும்பு மாநகர சபையின் அணுசரனையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது மட்டக்களப்பில் பரீட்சாத்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் கடந்த சனிக்கழமை 30.05.2020 அன்று மட்டக்களப்பு மாநகர மேயர் திரு. தியாகராஜா சரவணபவான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது திண்மக்கழிவுகளிலிருந்து இத்திட்டத்தினூடாக மின்சக்தியையும், பெற்றோல் மற்றும் டீசலினையும் பெற்றுக் கொள்ளமுடியுமென டபிலியூ. ரீ. டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான சந்தனம் பிச்சை விளக்கமளித்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் மட்டக்களப்பில் இதுபோன்ற திண்மக்கழிவுகளினூடாக சக்திகளைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு திட்டங்கள் வெவ்வேறு நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டு அவை உரிய காலத்தினுள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் கைவிடப்பட்டதாகவும், இத்திட்டம் வெற்றிகரமாக மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென மாநகர மேயர் கருத்துத் தெரிவித்தார். இவ்விஷேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சந்தனம் பிச்சை நெவில் மெல்ரோய், அல்பிரட் சம்பத், டபிலியூ. ரீ. டெக் நிறுவனத்தின் இணைப்பாளர் பீ. குமாரரத்னம், மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





