
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பிராந்தியக் காரியாலயங்கள் நாடுபூராகவும் 21 காணப்படுகின்றது. இவற்றின் செயல்திறன் மதிப்பீட்டில் மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் முதலிடம் வகிக்கின்றது என புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தவிசாளர் அனுர வல்பொல மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் புதிய இடத்திற்கு இடமாற்றி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தார்.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் மட்டக்களப்பு பிரந்திய அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு அக்கட்டிடத்தொகுதி 15.06.2020 அன்று பிராந்திய முகாமைத்துவப் பொறியிலாளர் எம்.ஆர்.எம். பாரிஸ் தலைமையில் புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தவிசாளர் அனுர வல்பொல இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் தான் அரசாங்க அதிபராக கடமை பொறுப்பேற்று வந்ததன் பின்னர் மண்அகழ்வு மற்றும் மண் ஏற்றிச் செல்வது தொடர்பான பிரச்சினை ஒரு சவாலுக்கரிய விடயமாகக் காணப்பட்டது. எனது பணியில் அதிகளவு நேரம் இம்மாவட்டத்தில் மண்அகழ்வு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு இதனை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருதற்காக செலவழித்துள்ளேன் எனவும், புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களும் இணைந்து ஒரு குழுவாக செயற்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டதுடன் இப்பிரதேச வேலையற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதுதவிர மாவட்டத்தில் காணப்படும் சட்டவிரோத மண்ணகழ்வு விடயத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை இப்பிராந்திய அலுவலகம் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க ஏற்றவகையில் வசதியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இக்காரியாலயத்திற்கான அனைத்து வசதிகளுடனான நிரந்தரக் கட்டிடம் அமைத்துத் தரப்படுமென தவிசாளர் அனுர வல்பொலவினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ். கோகுலன், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பரிசோதகர் குமார ஹெட்டிஆராச்சி, மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







