
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் 23.06.2020 காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள் ஞானிகள் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார்.
கொரோனா காலங்களில் பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறன் மனப்பாங்கு என்பவற்றினை முன்னேற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே இந்த வேலைத்திட்டம் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறார்களின் மனப்பாங்கினை ஆற்றுப்படுத்துவதற்கான மாவட்டத்தின் 14 பிரதேசங்களிலும் பெற்றோர்களை அழைத்து தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறார்களின் நிறை குறைகளை ஆராய்ந்து அதற்கான திட்டத்தினை சிறுவர் பாதுகாப்பு குழுக்களுடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் சிறுவர்கள் தனியாக பாட அலகுகளுக்கு அப்பால் உலகத்தின் வரலாறுகளையும் சமூகப் பெரியார்களின் வரலாற்று அறிவினையும் சிறுபருவத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக மாற்றுவதற்கு எமது சிறுவர் இல்லப்பொறுப்பாளர்கள் மற்றும் சிறுவர்கள் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிறார்கள் மத்தியில் பொதறிவு மற்றும் உலகறிவு தொடர்பான போட்டிகளை வைத்து ஆளுமையினை ஏற்படுத்தி சிறந்த பிரஜையாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார் இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந் மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன் சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.நஜீமுதின், மாவட்ட உளவள உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன், சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள், சிறுவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொன்டனர்.








