
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தற்பொழுது நாட்டில் பரவலாக அதிகரித்து வருகின்ற வேளையில் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இடம்பெற்ற டெங்கு முகாமைத்துவக் கூட்ட தீர்மானத்திற்கமைவாக இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இச் சிரமதானப் பணிகள் மாவட்ட செயலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமைகளில் பி.ப. 3.00 மணி தொடக்கம் பி.ப. 4.15 வரை நடைபெற்று வருகின்றது.
இதேவேளை அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள் அனைத்திலும் இச்சிரமதானப் பணிகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், இச்சிரமதானம் நடைபெற்றமை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உரிய அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






