
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் தட்டுமுனைக் கிராம சேவகர் பிரிவில் ஆலயத்திற்கான புதிய மடப்பள்ளி மண்டபமும், ஆலய பொதுக்கிணறும் 06.07.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டடத்திற்கும் பொதுக்கிணற்றுக்குமான நிதியினை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் மற்றும் பிரித்தானிய கரோ கிளையினரின் நிதிப் பங்களிப்புடன் மன்றத்தின் உறுப்பினர்களான ஜீவமணி மற்றும் துரைராஜா ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வைபவத்தின்போது முதியோர்களுக்கான ஆடைகள், நீண்ட தூரம் கால் நடையாக பாடசாலை செல்லும் மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் தென்னை, தேசி போன்ற மரக்கண்றுகளும் அப்பிரதேச மக்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மஜா அவர்கள் சிறுவர்களுக்கு வெறுமனே பாடசாலைக் கல்வியை மாத்திரம் போதிக்காது ஆன்மீகத்துடன் கூடிய கல்வியையும் புகட்டி சமுதாயத்தில் ஓர் முழுமை பெற்ற மனிதர்களாக உருவாக்குவதற்கு ஆன்மீகம் மிகவும் அத்தியாவசியமானதாகும். சக்தி வழிபாடானது ஆதி காலம் தொட்டு எம்மவர் மத்தியில் பிரபல்யம் பெற்ற ஓர் வழிபாடாகும். இதனையும் சிறப்பாக கடைப்பிடித்து எமது சமுகம் மத்தியிலே நல்லொழுக்கம் கொண்ட ஆரோக்கியமானதோர் சமுகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் வழிகாட்டிகளாக அமைய முன்வரவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் பழமை வாய்ந்த இக்கிராமத்தில் எல்லாவகையான வளங்களும் நிறைந்து காணப்படுகின்றபோதிலும் வறுமை என்ற விடயமானது மாவட்டத்திலே வாகரைப் பிரதேசத்தில் தான் முதலிடத்தில் இருப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன். சுறுசுறப்பான ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் இப்பிரதேசத்தில் சகலரும் முன்வந்து கைகோர்த்து இவ்வறுமை ஒழிப்பில் ஈடுபட முன்வரவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான உதவித் தொகைகளும், பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அமைப்பின் ஆண்டறிக்கையும் அவர்களின் மேல்மருவத்தூர் வங்கார் அடிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூலும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் திரு.எஸ். கரன், கிழக்குப் பல்கலைக்கழக்ததின் பொருளியல் துறை விரிவுரையாளர் திருமதி.சரோஜினி மகேஸ்வரன், வாகரைப் பிரதேச சபையின் ஊரியன் கட்டு உறுப்பனர் திரு.ஆர். ஜினேந்திரன், கலாசார உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள், பாடசாலை சிறார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








