
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று அச்சபையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் புலமைப் பரிசில் காசோலைகளை 07.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வழங்கிவைத்தார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின்கீழ் சுயதொழில் புரிவோர் முதுமையடையும்போது அவர்களுக்கான அரச ஓய்வூதிய பாதுகாப்பொன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் சுரக்கும, ஆரஸ்ஸாவ ஆகிய ஓய்வூதியத் திட்டங்கள் நாடுபூராகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து அங்கத்தவர்களானவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை போன்றவற்றில் சித்தியடையும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இம்மாவட்டத்தில் இத்திட்டதின்கீழ் அங்கத்துவம் பெற்றவர்கள் தமது 60வது வயதிலிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றுக் கொள்வதற்குமான வசதிகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு அதிகாரி ஏ.எஸ்எம். இர்சாத் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவி வரதநாதன் லிதுகா, எருவில் கண்ணகி மகா வித்தியாலய மாணவி மதியழகன் கிரிஸ்மிதா, குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி ஜெயரூபன் கேசகி, மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவன் துருபதன் தபீனன் ஆகியோருக்கான புலமைப் பரிசில் நிதிக் காசோலையினை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் வழங்கி வைத்தார்.இதில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






