
பொதுத் தேர்தல் 2020 இற்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 14, 15ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றவுள்ள அஞ்சல் வாக்கு மேற்பார்வை உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 13.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விசேட பயிற்சி வகுப்பில், அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் கொரோனா தடுப்பு முறை பேணி தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாக வாக்கு பதிவு செய்வற்குத் தேவையான அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.ஆர். சசீலனால் அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது உதவி தேர்தல் ஆணையாளர் திரு.தேவராஜா ஹென்ஸ்மன், அஞ்சல் வாக்களிப்பு கடமையில் ஈடுபடும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







