DSC 0917 resizedபாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில் பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாகப் பயன்படுத்தவேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 31.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 31.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் இம் மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய 03 தேர்தல் தொகுதிகளிலும் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள்; 05 பாராளுமன்றப் பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குளுக்களையும் சேர்ந்த 304 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 12 ஆயிரத்தி 815 அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 97 சதவீதமான அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக இம்முறை கோவிட் 19 கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்கள் இந்துக்கல்லூரியிலும், 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர். இதுதவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இவற்றில் இம்மாவட்டத்தைச்சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.

இன்றுவரை தேர்தல் விதிமுறைகள் வன்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகள் 222 பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடுகள் தொடர்பாக, முறைப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பொலிசாரின் உதவியுடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் மக்கள் அச்சமின்றி தமது வாக்குகளை நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கவேண்டுமென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்காளர்கள் தமது சுகாதார நலகன்கருதி வாக்களிக்கச் செல்லும்போது பேனாக்களைக் கொண்டு செல்லுமாறும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருமாறும், வாக்குச் சாவடிக்குள் நுளையும்போதும், வாக்களித்து விட்டு வெளியேறும்போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு வாக்காளர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதுதவிர வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமே நடைபெறும் எனவும், வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து வாக்கெண்ணும் மண்டபம் சீல் செய்யப்படுவதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு அரசியல் கட்சியினதும், சுயேச்சைக் குழுவினரினதும் பிரதிநிதகள் மூவர் வீதம் வாக்கெண்ணும் நிலைய வளாகத்தினுள் தரித்திருக்க அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.