
மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லைப்பிணக்கினை தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் 09.10.2020 அன்று களவிஐயம் ஒன்றினை கல்லாறு நீலாவணை பகுதிக்கு சென்று நிலமைகளை அவதானித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் மட்டக்களப்பு நிர்வாகமாவட்டம் பரந்துபட்டு காணப்பட்டமையின் காரணமாகவே மாவட்டத்தின் நிர்வாகத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களின் எல்லைகளை பார்வையிட்ட இரு குழுக்களும் எல்லை வரைபடங்களின் அடிப்படையில் தீர்மாணங்கள் எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.வர்த்தமானியில் 1987ம் அறிவிக்கப்பட்ட விசேட அறிவித்தலின் எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக நிலஅளவை படங்களில் பொருந்தாமல் உள்ளமை அவதானிக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் தனது அரசாங்க அதிபருடனும் அது தொடர்பான குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் தீர்மாணத்தினை மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
எல்லைகளை அவதானித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அத்தோடு மட்டக்களப்பு அம்பாறை நிலஅளவை திணைக்களத்தின் நிலஅளவை அத்தியட்சகர்கள் உள்ளுராட்சி ஆணையாளர், பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா மற்றும் துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.






