
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 17.10.2020 அன்று ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மாஹ் பள்ளிவாயலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
தனது பதவியேற்பினையடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் நோக்குடன் இடம்பெற்ற இவ்விஜயத்தின்போது பள்ளிவாயல் பிரதம கதீப் மௌலவி. அல்ஹாபிழ் நியாஸ் அவர்களுக்கு நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார். இதன்போது அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் சிறப்பான நிர்வாகப் பணியினை மேற்கொள்வதற்கும், அவரது தேக ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மாஹ் பள்ளிவாயல் நிருவாகிகளுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திரு.கே. தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி திரு.வீ. ஜீவானந்தன், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ். எம்.சியாம், உறுப்பினர் சட்டத்தரணி அல்ஹாஜ்.ஏ. உவைஸ் உட்பட ஏனைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






