
மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களின் தலைமையில் 26.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் இப் பகுதிகளில் இறால் பண்ணைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியதினால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவராதல் போன்ற பாதிப்புக்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கவனத்திற் கொண்ட இவ்வுயர் மட்டக்குழுவானது அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்ந்தது.
அனைவருக்கும் குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுக்கும் தொனிப்பொருளில் குடிநீர் வசதியற்றவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க 850 மில்லியன் ரூபாய் தேவையேற்படும் எனவும் இதில் முன்னுரிமை அடிப்படையில் இப்பகுதிக்கான குடிநீர் வசதினை ஏற்படுத்தத் தேவையான 200 மில்லியன் ரூபாவினை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் வயல் நிலங்கள் உவராதலைத் தடுத்தல் மற்றும் இறால் மற்றும் மீன் பண்ணைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீரினை மீள்சுழற்சி செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவினையும் அமைத்துள்ளது.
இவ்வுயர் மட்டக் கலந்துரையாடலில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.எஸ். வியாழேந்திரன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.கோவிந்தன் கருணாகரன், திரு.இரா. சாணக்கியன் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் திரு.ரவிகுமார், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரன்ஜினி முகுந்தன் உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







