
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகளைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனடிப்படையில் முதல்கட்டமாக மாவட்டத்தில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் தலைமையில் 27.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி. மயூரி ஜனன் சுமார் இரண்டு இலட்சத்தி பத்தாயிரம் ரூபா பெறுமதியான 140 உலர் உணவுப் பொதிகளை மாவட்ட செயலாளரிடம் கையளித்தார். இவ்வுலர் உணவுப் பொதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் மாவட்ட செயலகத்தினால் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்டப் பொறியியலாளர் ரீ. சுமன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







