
மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் 07.12.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த 120 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியில் காணப்படுகின்ற அரச திணைக்களங்களுக்கான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் குறுங்கால மற்றும் நீண்ட கால குத்தகைக்கு காணிகளை வழங்குவது தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான சந்தை மற்றும் விளையாட்டு மைதானங்களுக்காக காணிகளை பாராதீனப்படுத்துதல் தொடர்பாகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்குதல் தொடர்பாகவும் இதன்போது பரிசீலனை செய்யப்பட்டுள்ளதுடன் பல திட்டங்களுக்கு சிபாரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், காணிப்பயன்பாட்டு திட்டமிடல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.எஸ்.கிறிசாந்தினி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களகங்களின் அரச அதிகாரிகள் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர்.







