
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் ஓர் அம்சமான டிஜிடலைஸ் எகொனொமி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தொடுகை முறையற்ற கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டினூடான பணப்பரிமாற்ற சேவையினை சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஹட்டன் நசனல் வங்கி 18.12.2021 அன்று மட்டக்களப்பில் அறிமுகம் செய்துவைத்தது.
கையடக்கத் தொலைபேசியூடாக இயங்கும் விசேட செயலியான “சோலோ” எனும் அப்பினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்யவும், நுகர்வோர் அதனைக் கொள்வனவு செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நத்தார் சந்தையினைத் திறந்து வைத்ததுடன் சோலோ செயலியினூடாக உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறையினையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ. வாசுதேவன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. உதயராணி யுகேந்திரன், ஹட்டன் நெசனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் திரு.என். கேதீஸ்வரன், மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். ஐ. உவைஸ், வங்கியின் உயர் அதிகாரிகளான திரு.என். சத்தியசீலன், திரு.கே. திலகேசன், மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மேற்பார்வையாளர் திரு.வினோத் உள்ளிட்ட வங்கியின் உத்தியோகத்தர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







