
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் அரச சேவைகளை தகவல் தொழினுட்ப வசதிகளுடன் வினைத்திறனாக மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் திரு கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக மாவட்ட செயலகத்திலும், பிரதேச செயலகங்களிலும் வழங்கப்படும் அரச சேவைகளை விரைவு படுத்தி வினைத்திறனுடன் வழங்குவதற்காக புதிய செயலிகளை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலக மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இவ்விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதனடிப்படையில் மைக்ரோ சொப்ட் பயிற்சியாளர்களின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் திரு எம். விக்னராஜின் மேற்பார்வையில் இடம்பெற்ற Network and System Administration பயிற்சியினை பூர்த்தி செய்த மாவட்ட தகவல் தொழினுட்ப பிரிவு உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை அரசாங்க அதிபர் திரு கே. கருணாகரன் அவர்கள் 11.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகர்தர் திருமதி. லக்சிகா கதீஷன், மைக்ரோ சொப்ட் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் எம்.எச்.எம். முர்சித் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







