
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி, சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெறுச் செல்லும் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களிற்கு மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டும் கௌரவமும் வழங்கம் நிகழ்வு 21/01/2022 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.மாவட்ட சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இச் சேவை நலன் பாராட்டு நிகழ்வின்போது திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களிற்கு அரசாங்க அதிபர் கருணாகரன் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். மேலும் இதன்போது மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, பரிசில்களும் வழங்கி விசேட கௌரவமும் வழங்கப்பட்டது.
இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று எதிர்வரும் ஜனவரி 24 அன்று கொழும்பில் சமுர்த்தி திணைக்களத்தில் கடமையை பொறுப்பேற்கவுள்ள திருமதி பாக்கியராஜா அவர்கள், 1991.05.20 அன்று தனது முதல் அரச சேவையை ஒரு ஆசிரியையாக தொடங்கினார். தனது முதல் ஆசிரியை நியமனத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஓர் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியையாக 1994 ஜனவரி மாதம் வரை கடமையாற்றியுள்ளார். பின்னர் 1994.01.17ம் முதல் இலங்கை திட்டமிடல் பிரிவுக்கு உள்வாங்கப்பட்டு உதவி திட்டமிடல் பணிப்பாளராக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம், அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் பணியாற்றினார்.பின்னர் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2012 தொடக்கம் 2018 வரை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்தார்.
இதனைத் தொடர்ந்து 2018.07.05ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2022.01.23 வரை மாவட்ட செயலகத்தில் பணியாற்றி மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 2022.01.24 அன்று தனது கடமையை கொழும்பில் பொறுப்பேற்கவுள்ளார்.
கிழக்கு பல்கலை கழகத்தில் 1988.05.01ல் கணித விஞ்ஞான முதல்தர சிறப்பு பட்டதாரியான இவர் தற்போது இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்தினை 2018ம் ஆண்டில் பெற்றுக்கொண்டுள்ளதுடன், மேலதிக பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சுமார் 31 வருடங்களாக தம் சேவையை மிகச்சிறப்பாக வழங்கி வந்த இவர் கிழக்கு மண்ணிற்கு பெருமை சேர்த்த பெண்மணியாவார்.








