
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடர்கள் எற்படும் போது பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.கருணாகரன் அவர்கள் தலைமையில் 21.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இம் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை எற்படும் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளான கிரான், ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித மோதல்களால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ உத்தியேகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இம்மாவட்டத்தில் சுனாமி இடர் எற்படும்போது பொது மக்களினை பாதுகாப்பதிற்க்காக ஏழு சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
அத்துடன் நாவற்குடா கிழக்கு பிரதேசத்தில் மழை காலங்களில் நீர் வழிந்தோடமுடியாது நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு எற்பட்டிருந்த பிரதேசங்களில் நீர் வடிந்து தோனாவிற்கு செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட 300 மீட்டர் நீளமான வடிகான் அமைப்பிணை அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரிகள் குழு களவியஜம் செய்து பார்வையிட்டது. இவ் வடிகானமைப்பு அமைத்ததினால் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் நன்மை அடைந்துள்ளனர்.
மேலும் ஆரையம்பதி,காத்தான்குடி எல்லை பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வடிந்து ஓடாது தேங்கி இருப்பதினையும் இக்குழுவிற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தெரியப்படுத்தினார். இதனை நேரில் சென்று பார்வையிட்ட இக்குழு இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக புதிதாக 250 மீட்டர் வடிகானினை அமைப்பதற்து ஐந்து மில்லியன் ரூபாயினை ஒதுக்கி தருவதாக உறுதிமொழி வழங்கியது. இதனூடாக வெள்ளநீரானது கடலுக்கு தடையின்றி செல்வதுடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன்,மனிதவளம் மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எ.திலகரத்ன, அனர்த்த முகாமைத்துவ செயற்றிட்ட பணிப்பாளர் பிரிகேடியர் டபில்யு.எல்.எ.சி.பெரேரா, பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்கான பணிப்பாளர் சுகத் திசாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ திட்டமிடலுக்கான பணிப்பாளர் சுனில் ஜயவீர, இராணுவ ஒருங்கிணைப்பாளர் கமாண்டர் எச்.என்.எஸ்.பெரேரா, அனர்த்த முகாமைத்துவ தகவல் தொடர்பாடல் உதவி பணிப்பாளர் துசித்த வைத்தியரத்ன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ. வாசுதேவன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் (ஆரையம்பதி) திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.








