
மட்டக்ளப்பில் ஒமிக்ரோன் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.இதற்கமைவாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் 27.01.2022 அன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க. கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஒமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைவாக சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் பொதுமக்களின் ஒத்துளைப்பின்றி அரச உத்தியோகத்தர்களால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், பொதுமக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும், சமுக இடைவெளியினைப் பேணுமாறும், சுகாதாரத் தரப்பினரின் அறுவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், மீறுவோரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தவிர்க்க முடியாததாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.






