
75 ஆவது சுதந்திர தின பவள விழா நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் 75 இலட்சம் மரங்களை நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட இருக்கின்ற 75 ஆவது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களினூடாக இவ் வருடம் முழுவதும் பல்வேறு மக்கள்நல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்திற்கான மரநடுகை நிகழ்வு வாகரை பிரதேசத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் வாகரை சுற்றுலா விடுதி வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் மரங்களை நடும் இத்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த, மேலதிக செயலாளர் ஜே.ஜே. தர்மதிலக ஆகிய இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








