மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மகளிர் தினத்தையொட்டி போட்டி நிகழ்வுகள் 05/03/2022 அன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
"பாராபட்சத்தை உடைத்தெறி - பெண் சமத்துவத்தை மதித்திடு'' எனும் தொணிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குறித்த போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி திருமதி.மயூரி ஜனன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு .கே.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு .வி.ஈஸ்பரன் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதேச மட்ட அணிகள் எல்லே மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கலந்துகொண்டிருந்ததுடன், விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மகளீர் தினத்தினை முன்னிட்டு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு .கே.கருணாகரன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்வின் இறுதி போட்டிகள் 06/03/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிதொடக்கம் இடம்பெறவுள்ளதுடன் நாளைய தினம் இன்னும் பல பெண்களுக்கான கண்காட்சிகள் புத்தாக்கங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.






