
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வாராந்தம் வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான "வாரவலம்" பத்திரிகையின் அறிமுக விழா 01.04.2022 ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வெளியாகும் பத்திரிகைகள் மிக அரிதாகவே காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் "வாரவலம்" பத்திரிகையின் அறிமுக விழா 01.04.2022 அன்று வெள்ளிக்கிழமை பி.ப. 04.00 மணிக்கு காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.முஸ்தபா (ஜேபி) பலாஹி அவர்களது தலைமையில் இடம்பெற்ற பத்திரிகை அறிமுக விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திரு. கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது "வாரவலம்" பத்திரிகையின் முதற்பரதி அரசாங்க அதிபர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆன்மீக அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு வழங்கி அறிமுகம் செய்துவைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத்.சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் மற்றும் ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஜீ.ம்.அமீன் பலாஹி உள்ளிட்டோர் குறித்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
சூடு, சுவை, சுவாரஸ்யம் ஆகியவற்றை தன்னகத்தே சுமந்துவரவுள்ள ஜனரஞ்சக செய்தி இதழான "வார வலம்" பத்திரிகையின் பிரதம ஆசிரியராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கான் பணியாற்றுவதுடன், இவர் இலத்திரனியல், அச்சு, இணையவளி மற்றும் சமூக ஊடகங்களின் பிராந்திய செய்தியாளராகவும், சர்வதேச ஊடகங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளராக பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.







