
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 18 நாள் சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது 07.04.2022 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.முகுந்தன் நவரூபரஞ்சினி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் வீ.சந்திரகுமார் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அதிதிகளின் சிறப்புரைகள் இடம் பெற்றதுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார நிகழ்வுகள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டன.
இப் பயிற்சி வகுப்பின் மூலம் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.







