
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது புதன்கிழமை மாலை 18.05.2022 அன்று மாவட்டச் செயலாளர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவு மத்தியஸ்த சபைக்காக தெரிவு செய்யப்பட்ட 33 மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த மத்தியஸ்த சபைக்கு முதன் முறையாக 7 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை முதன் முறையாக ஓய்வு பெற்ற அதிபரான பஹியா அப்துல் காதர் எனும் பெண்ணொருவர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் இரு. கே. கருணாகரன் அவர்கள் நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வழி நடத்தப்படும் மத்தியஸ்த சபையின் உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 பேர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் சமூகம், இனம், சாதி, மதம், கட்சி என்று பிரித்தாளும் சூட்சிகளுக்கப்பால் சென்று நடு நிலையாகச் செயற்பட்டு சேவையாற்ற வேண்டும். பிரித்தாளும் சிந்தனை உங்களுக்கு சிறிதும் வந்துவிடக் கூடாது” என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஹன்சுல் சிஹானா மாவட்ட மத்தியஸ்த சபைகள் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத், மத்தியஸ்த சபைகள் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்த தர்மினி உட்பட இன்னும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.







