
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் (Qi zhenhong) மட்டக்களப்பு மாவட்டத்தில் 26.05.2022 ஆம் திகதி இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட சீன தூதரக அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டிருந்ததுடன், இந்த இறுக்கமான சூழலில் சீன அரசினால் இலங்கை பூராகவும் வறிய மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 2500 ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு சீனத் தூதுவரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் இதன்போது சீனத் தூதுர் அறிந்துகொள்ளும் வண்ணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களினால் அளிக்கை செய்யப்பட்டது.
இதன்போது மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.இதன்போது சீன தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நினைவுச் பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினைத் தொடர்ந்து, சீன தூதுவர் உள்ளிட்ட, சீன தூதரக அதிகாரிகள் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தை சென்று பார்வையிட்டதுடன், சிறியதொரு அன்பளிப்பினையும் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை பேதுரு ஜீவராஜ்சிடம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டவிள்யு.கே.சில்வா, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு.கே.தயாபரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மேகன், மாவட்ட செயலக கணக்காளர்
திரு.எம். வினோத், பிரதேச செயலாளர்கள், மாவட்ட பொறியியலாளர் திரு.ரீ.சுமன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.ஜதீஸ்குமார் உள்ளிட்ட மேலும் பல மாவட்ட செயலக உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.









