
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய இரசாயன விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கான விசேட தெளிவூட்டல் செயலமர்வொன்று 09.11.2022 ம் திகதி மட்டடக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட தெளிவூட்டல் செயலமர்வில் பீடை நசினிகள் பதிவாளர் நாயகம் திரு.லசந்த ரட்ணவீர, மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு.இராஜதுரை ஹரிகரன், பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) திரு.வீ.பேரின்பராசா ஆகியோர் கலந்துகொண்டு தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சட்ட விரோத விவசாய இரசாயன வியாபாரம், பீடை நாசினி பாவனை, பீடை நாசினி இறக்குமதி சட்டங்கள், தரமான இரசாயன உரங்களை, பீடை நாசினிகளை பெற்றுக்கொடுத்தல், மனிதனுக்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத இரசாயனங்களை இறக்குமதி செய்து கொடுப்பது, பாவனையாளருக்கு பாதிப்புகள் அற்ற இரசாயன உரங்களை பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பது, விற்பனையாளர்கள் கடைப்பிடக்க வேண்டிய சட்டதிட்டங்கள், விளம்பரப்படுத்தல்கள் போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக விரிவான முறையில் தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், Crop Life - Sri Lanka அமைப்பின் பிரதிநிதிகள், சுகாதாரத் துறையினர், இரசாயண கிருமிநாசினிகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பீடைநாசி விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டு பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







