
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இந்து கலாசார பிரிவின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) மற்றும் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இந்து சமய தலைவர்களான ஆலய நிர்வாகிகள், இந்துசமய நிறுவன தலைவர்கள், இந்துசமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான சமயங்களினூடான “சமூக அக்கறையும், அதனூடான சேவையும்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன் தலைமையில் 26.11.2022 ம் திகதி சனிக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9.00 மணிதொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற்றது.
இதில் “அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம், அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் நுட்பங்கள்” எனும் தலைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும், ஒப்பீட்டு சமய சமூக நல்லுறவுத்துறையின் தலைவருமான திரு.கே.மதிசீலன் அவர்களும், “ஆலய நிர்வாகிகளின் தற்போதைய நிலையும், அவர்கள் சமூகத்துக்கு செய்யும் பணிகளும்” எனும் தலைப்பில் சைவப்புலவரும், சைவ வித்தகருமான சிவஸ்ரீ.வை.கஜேந்திரா சர்மா அவர்களாலும் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் தொடக்கவுரையினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.ப.குமுதினி , வெல்லாவெளி பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.உதயமலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






