
உள்ளூராட்சித் தேர்தல் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சூபியான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தல் தொடர்பாகவும், வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியான 18.01.2023 இலிருந்து இறுதி நாளான எதிர்வரும் 21ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தருணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல் அலுவகத்திற்கு வாகனங்கள் உள்நுழைதல், வெளிச்செல்லுதல், மற்றும் வேட்புமனுவை ஒப்படைக்கும் போது அனுமதிக்கப்படும் நபர்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.யு.சரத் குமார, மட்டக்களப்பு மாவட்ட முதலாம் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர்.குமாரசிறி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.






