
உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பதவி நிலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஶ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சூபியான் தலைமையில் மாவட்ட செயலகத்தில்19.01.2023 அன்று இடம் பெற்றது.
இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பதவி நிலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், பொறுப்புகள் தொடர்பான தெளிவு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடைவதனால் கால தாமதமின்றி, துரிதமாக வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மோகன், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர் என பலர் பங்குபற்றினர்.





